உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உற்சாக துள்ளல் உங்களாலே





வணக்கம் என் வலையுலக உறவுகளே.. அனைவரும் நலமா? வலைப்பக்கம் விட்டு வெகுவாய் ஒதுங்கி இருந்த இவ்வேளையில்,மெயிலிலும், முக நூலின் வாயிலாகவும் என்னை எழுதத்தூண்டி, மீண்டும் புதிதாய் என்னை பயணப்படுவதற்கான உத்வேகத்தை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... என்ன ரேவா திடீர்ன்னு கவிதையில்லாம வலைப்பக்கம் வந்திருக்காளேன்னு தானே யோசிக்கிறேங்கிற ஆமாம் இந்த பதிவு முழுக்க முழுக்க நன்றிக்கான பதிவு... விளையாட்டுத்தனமாகவும், அதே நேரத்தில் என் மன அழுத்தங்களிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வதின் நிமித்தமாயும் இவ்வலைப்பக்கம் வந்தேன்.. எண்ணிச்சரியாய் மூன்றாடுகளை தொடவிருக்கும் இந் நேரத்தில் இதுவரை என்பக்கம் வந்து சென்ற பார்வையாளர்கள் இரண்டு லட்சத்தி சொஞ்சம் பேருக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இப்பதிவை எழுதுகின்றேன்... இனி எழுத்தை சரியாய் செய்வேனென்கிற உறுதியோடு பயணப்படுகின்றேன்...

2010ல் பதிவுலகம் ஒன்றை அறியாத காலம், எங்கோ ஒரு தேடலில் நிமித்தம் நண்பன் ப்ரியமுடன் வசந்தின் தங்கைக்கான கடிதத்தை வலைப்பதிவில் படித்ததும், தூசி தட்டு எடுக்கப்பட்ட கவிதைகளைத்தான் ஆரம்பங்களில் பகிர்ந்தது. அதற்கு முன்பே ஒரு வலைப்பதிவை தொடங்கி வேலையின் பொருட்டு அதில் பதிவுகளை தொடராதது ஒருபுறமிருக்க, அந்த கடிதத்தின் ஆவலில் துளிர்த்தது தான் என் எழுத்து..2011ல் பிற்பகுதியில் தான் வலையுலகத்தின் பின்னனிகள் சரியாய் புலப்பட்ட காலம்.. நம் எழுத்து தனக்கேற்ற வாசகரை தானே தேடிக்கொள்ளுமென்பதும், நம் எழுத்து தனக்கேற்றபடி நம் எழுத்தை மாற்றிக்கொள்ளுமென்பதையும் சரியாய் உணர்ந்த காலங்கள் தான் இன்றைய காலங்கள்.. இன்னும் எழுத்தை சரியாய் எசெய்யவில்லை என்பது எனக்கு நன்றாய் தெரிந்தாலும், ஆரம்ப காலங்களிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறேன்,அது உங்களால் தான் சாத்தியம் என்பதை சொல்வதில் பெருமையே எனக்கு.. இந்த வெற்றி இங்கிருந்து தான் சாத்தியமெனக்கு..படிப்பேதுமில்லா, இன்னும் சரியாய்ச்சொல்வதானால் என் கவிதைகளை சரிவர புரிந்துகொள்ள இயலா பின்னனி என்னுடையதென்றாலும், உங்களின் பாராட்டுகளும், பாசமும் தான் என்னை இத்தனை தூரம் உந்தித்தள்ளியது..

இதுவரை என் பதிவுகளுக்கு திரட்டிகளின் வாயிலாயும், என் பதிவுகளின் வாயிலாகவும் வாக்கிட்டு, மறுமொழியிட்டு சென்ற அத்தனை உறவுகளுக்கும் நன்றி சொல்லி அன்னியப்படுத்த விரும்பாத போதிலும், என் ஆணிவேருக்கு பலம் கொடுத்த உங்களுக்கு என்னிடம் கொடுக்க நன்றியைத்தவிர வேறில்லை

இதுவரை பதிந்த கவிதைகள் 253
பெற்ற மறுமொழிகள் 4150
மொத்த பார்வையாளர்கள் 2002150

இக்குழந்தையின் கிறுக்கலையும் ரசித்து, எனக்கும் எழுத்தில் பொறுப்புணர்ச்சியை எடுத்துக்கொடுத்த என் வலையுலகில் நான் விரும்பி ரசித்த, ரசிக்கின்ற என் அத்தனை நட்புறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி..
குறிப்பாய் இங்கு சில நட்புறவுகளுக்கு மனமார நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றேன்
நண்பன் வசந்த், மழைக்காதலன், ரசிகன்,ஜோ, இந்திரா கிறுக்கல்கள், நித்தி மேகா
சகோதரன் கவிதைக்காரன் டைரி
தம்பி ரமேஷ் ராக்‌ஷன்,பிரபா, முக நூலில் என் பதிவுதனை பகிர்ந்து இன்னும் இன்னுமென எழுதுவதற்கான உற்சாகமேற்படுத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் சகோதரன் மெல்வின், இன்னும் என் பின்புலத்தில் என்னை உந்தித்தள்ளும் என் ஆகச்சிறந்த நட்பானவளுக்கும்,  என் மனமார்ந்த நன்றிகள்...


என் ஆக்க சக்தியாய் இருக்கும் என் தோல்விகளே என்னை இங்கு எடுத்துவந்ததென்பதையும் எழுத்தில் வைக்க தயக்கமில்லையெனக்கு,,,

இதுவரை எழுதியவை 
கூட்டிச்சென்ற தூரமிது புரிந்தாலும்
போகவேண்டிய தூரமின்னும்
வெகுதொலையிலிருப்பது புலப்பட


இணைந்தே இருங்கள் இச்சிறுபிள்ளை கிறுக்கலோடு... குறைகளையும் என் நிறைகளுக்கு காரணமாய் சுட்டிக்காட்டிய என் அன்பு நட்புக்களுக்கு நன்றி...
இனியும் என் ஆக்கசக்தியாய் இருக்கப்போகின்ற இவ்வலையுலக உறவுகளின் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி நன்றி நன்றி.....

திங்கள், 22 ஏப்ரல், 2013

அவ்வளவே



ஒன்று
இரண்டாக
இரண்டு
நூறாக
கூடிக்கொண்டே போகிறது
உன்னைக் குறித்த
என் கேள்விகள்,
எல்லாக் கேள்விக்கும்
ஒற்றைப் புன்னகையை
பதிலெனக் கொடுத்தாலும்
போதுமானதாய் இல்லை
கேள்வியின் கோரப்பசிக்கு.
கொஞ்சமாய் அதை -நீ
மென்று விழுங்க
பதில்
தொண்டை நெறிக்கும் முன்
துடித்து விழிக்குதுன்
சுயமுகம்
இதுவரை காட்டியவை
கூட்டிச்சென்ற தூரத்திலிருந்து
திரும்புதல் முடியாதென்பதை
தொடர் மெளனமும்
சில கண்ணீர் துளிகளும்
சிறு தடுமாற்றமும்
எடுத்துரைக்க
மிச்சமிருக்கும் ப்ரியங்களை
எச்சமென
நீ புசிக்கையில்
இரவை புணர்ந்து
முடிக்கிறது
இன்னுமொரு பகல்..
இலக்கணங்கள் புரிந்தாலும்
நீ இன்னுமொரு
ஆண்
அவ்வளவே...




செவ்வாய், 16 ஏப்ரல், 2013

தேடல்




பெரும் காத்திருப்பில்
சேர்ந்துவைத்திருக்கிறேன்
வாழ்வின் மீதத்திற்கான ப்ரியங்களையும்
இதுவரை பிடிக்காத சண்டைகளுக்கான
காரணங்களையும்..

பதற்றமிக்க
இத்தனிமைபிரதேசத்தில்
மெளனத் தீ கொழுந்துவிட்டெறிய
கனவுச் சிறகசைத்து
உனை அடைந்திடுவேன்
தணிக்கைகளற்று...

இல்லா உருவமொன்றை
அருவமாய் ஏற்றாகிவிட்டது
இல்லாமைக்குள் இருப்புகொண்டு
தவிக்கின்ற இளமைக்குள்
விலை வைக்கா
கூட்டம் தேடி அலைகிறது
இந்நாட்கள்

வேகத்தடைகளென
முளைக்கின்ற உறவுதனையும்
சமவெளி நோக்கி
இழுத்துச்செல்ல முயலுகையில்
முந்திக்கொண்டு நிற்கிறதாங்கோர்
தனிமை

நிலம் உறிஞ்சிய மிச்சம் போக
வேர்கால்களில் சேமிக்ககிடைக்கின்ற
சிறுதுளியில்
சில்லிட்டு துளிர்விட
எப்படியும் உனைத்தேடி அடைதலில்
வேர்விடுவேன்
இம்முறை...

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஒரு சொல்...





யாருக்கும் கேட்காதபடி
தனக்கானதொரு மொழியெடுத்து
விழியறுக்கிறது
உனதிந்த மெளனம்

பிடித்த அத்தனையிலும்
பிடித்தமற்று
நீள்கிறது
எனதிந்த நாட்கள்

ஒரே நேரத்தில் சொல்லத்துணிந்த
சொற்களின் நகர்வுக்கான
இக்காத்திருப்பென்பது
காட்சிபடுத்தமுடியா
ஏதோ ஒரு அழிவை கண்முன்னே
நிறுத்துகிறது

பார்வைகளில்
கடந்து போவது மட்டுமே
இனி
சாத்தியமென்றான பின்
நீ உடைத்தெரிந்த சொல்லில்
இங்குமங்குமாய் சிதறிக்கிடக்கும்
ஞாபகவேர்கள்
ஒவ்வொன்றாய் துளிர்த்து
சுவாசம் நெறிக்க

கணத்ததொரு நிராகரிப்பை
சலனமே இல்லாமல்
ஏற்றிவருகிறது
நீ உடைத்த ஒரு சொல்...

- ரேவா



திங்கள், 1 ஏப்ரல், 2013

ஒரு துளி





இருப்பின் வாயிலை
உடைத்து வெளியேறுகிறது
நம்பிக்கையின் விருட்சம்
இன்னதென்று சொல்லத்தெரிய
ஓப்பீடுகளால்
உடைந்த மெளனத்தின் கணத்தை
உதடுகளால் கடந்து செல்வது
அவ்வளவு சுலபமில்லாது போயினும்
வெறித்து தொடரும்
எல்லோரின் பார்வைக்கு பின்னும்
இன்னும் பருகப்படாமலே இருக்கிறது
நீங்களறியா
உண்மையின்
ஒரு துளி
விஷம்....

-ரேவா